Skip to main content

முடிவல்ல,மீண்டும் ஆரம்பம்!

அனைவருக்கும் எனதன்பார்ந்த வணக்கம்!
இறுதியாக இவ் blog இல் எழுதியது 2012 ல், இப்போது 2019. சரியாக 7 வருட இடைவெளி. 
இந்த 7 வருடங்களும் வாழ்க்கையின் மிகச்சிறந்த படிப்பினை தந்த 7 வருடங்கள். இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் முன்னேற்றம் தான். 
இந்த 7 வருடங்களில் உலகமே நிறையவே முன்னேறி விட்டிருக்கின்றது,  குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு வலையமைப்பில். கைத்தொலைபேசி பாரிய வளர்ச்சி கண்டுவிட்டது. 2012 ல் ஒரு Pc செய்த மாயாஜாலங்களை விடவும் அதிகமாக 2019 ல் சிறு கைத்தொலைபேசி செய்கின்றது. 

சமூக வலைத்தளங்கள் வேறு கட்டத்தை அடைந்துவிட்டன. ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றக்கூட கூடிய சக்தியாக அவை மாறி விட்டிருக்கின்றன.
இலட்சக்கணக்கான இலவச செயலிகள் எங்கும் இறைந்து கிடக்கின்றன. இது செயலிகள் சூழ் உலகு. செயலிகள் இன்றி எதுவும் அசையாது.

பிட்காயின் (Bitcoin) 2012 ல் ஒன்று 13 US$ விற்றது, 2017 ல் ஒன்று 20000 US$ ற்கு சென்றது. இன்றைய தேதியில்  ஒரு Bitcoin 10000 US$ ற்கு விற்பனையாகின்றது. 
போதையில், சுய சிந்தனை இன்றி, தள்ளாடியபடி 2012 ல் Bitcoin வாங்கியவர்கள், 2019 ல் பில்லியனர்களாக இருக்கும் சுவாரசிய சம்பவங்களும் உண்டு.
அதே போல 2012ல் ஆயிரக்கணக்கான Bitcoin களை mining செய்துவிட்டு, அக் கணினி வன்தட்டுக்களை e- waste க்குள் எறிந்து விட்டு, 2019 ல் அவற்றைத் தேடித்திரியும் சோக கதைகளும் உண்டு. Bitcoin பற்றி ஒரு தொடரே எழுதலாம், எழுதும் நோக்கம் உண்டு, பின்பு விலாவரியாக எழுதுகின்றேன்.

அடுத்து கிரிக்கட். கிரிக்கட்டிலும் பல மாற்றம் மற்றும் முன்னேற்றம். பல ஜாம்பவான்கள் இளைப்பாறி விட்டிருக்கின்றனர். பழையன கழிதலும் புதியன புகுதலும் என புதியவர்கள் கலக்கத் தொடங்கி விட்டார்கள். 2012ல் ஆரம்ப கட்டத்தில் இருந்தவர்கள் இப்போது கோலோச்சுகின்றார்கள். சச்சின் சச்சின் என அதிர்ந்த காலம் போய், தோனி தோனி என மாற்றம் பெற்று, சம காலத்தில் கோலி கோலி என ஆகிவிட்டிருக்கின்றது. இது வருங்காலத்தில் பாண்ட் பாண்ட் Rishab Pant) என்றும் மாறலாம், அல்லது கில் கில் (Shubman Gill) என்றும் மாறலாம். முயற்சி அவர்கள் கையில். IPL ல் இன் மூலம் இளையவர்கள் நிறைய கற்றுக் கொள்கின்றார்கள், நிறைய திறமைகளை வளர்த்துக் கொள்கின்றார்கள், கோடிகளில் சம்பாதிக்கவும் செய்கின்றார்கள். 
கிரிக்கட்டின் எதிர்காலம் மிகவும் சிறப்பாகவே தென்படுகின்றது. ஏனென்றால் நீண்ட நாட்களாக டெஸ்ட் கிரிக்கட் போரடிக்கின்றது, 5 நாட்களை 4 நாட்களாக மாற்ற வேண்டும் என்கிற கருத்து சிதைபடும் வண்ணம், கடந்த இரண்டு வருடங்களில் test cricket is best cricket என கூறக்கூடிய வகையில் சிறப்பான பல போட்டிகள் இடம்பெற்றிருந்தன. டெஸ்ட் கிரிக்கட் இன்னும் வாழும். ஒரு நாள் கிரிக்கட்டும் அவ்வாறே. கிரிக்கட் மீண்டும் ஒலிம்பிக்கில் இடம்பிடிக்கும் நாள் தொலைவில் இல்லை.

அடுத்து அரசியலைப் பார்த்தால், அது உள் நாடாகட்டும் அல்லது உலக அரசியல் ஆகட்டும் சாக்கடை சாக்கடை தானே. ஆட்சிக்கு வருபவன் தன் வரப்பிரசாதங்களை மட்டுமே பார்க்கின்றான். 2012 ல் இருந்து 2019 வரை மாற்றம் பெறாத ஒரே விடயம் அரசியல் வாதிகள் மட்டுமே. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாடும் நாட்டு மக்களும் நாசமாய்த்தான் போகின்றார்கள். 
2012 ல் நூறு ரூபாய்க்கு இருந்த பண மதிப்பு, 2019 ல் மிகவும் குறைந்து விட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இலங்கையின் பண மதிப்பு நாளுக்கு நாள் இழக்கப்படுகின்றது.
தமிழ் மக்களுக்கென்று சரியான ஒரு தலைமை இன்னமும் அமையவில்லை. இவர்களை நினைத்தால் தமிழ் நண்டுக்கதை தான் ஞாபகம் வருகின்றது. சுருக்கமாக சொன்னால் வடக்குத் தேய்கின்றது தெற்கு வாழ்கின்றது.
இலங்கை வாழ் தமிழர்களுக்கான விடிவு அடுத்த 15 ஆண்டுக்குள் இல்லவே இல்லை என்பது சத்தியமான வேதனை தரும் உண்மை. 

இப்படியாக கடந்த 7 வருடங்களில் பல மாற்றங்கள். 
இவற்றைப் பற்றியும் இன்னும் பல புதிய விடயங்களையும் வரும் இடுகைகளில் பேசலாம். 
இன்னும் எழுத நிறைய விடயங்கள் உள்ளது. 
பார்க்கலாம். 


Comments

Popular posts from this blog

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவம் கொண்டதுடன், அதன் இலக்கணத்த

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

ஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :

த ற்காலத்தில் ஆங்கில மொழியின் அவசியத்தையோ அல்லது அதன் ஆதிக்கத் தன்மையையோ யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகத்தை சிறிய கூடைப்பந்தின் அளவிற்குச் சுருக்கி விட்ட இந்தக் கணினி கணத்தில், செவ்வாய்க்கு ரோவரை (Rover) அனுப்பும் விஞ்ஞான யுகத்தில், ஆங்கில மொழியின் சேவை அளப்பரியது; அதன் தேவை அளவிட முடியாதது. உலகத்தின் மொழியாகவும், நவ நாகரீகத்தின் வழியாகவும் ஆங்கிலம் பார்க்கப்படுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை. பெரும் பாலான வளர்ந்த நாடுகளில் ஆங்கில மொழியானது தாய் மொழியாக அல்லது அரச கரும மொழிகளில் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் எம்மைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தான் ஆங்கில மொழி கற்றல் பற்றிய பிரச்சினையே எழுகின்றது. ஆம், எம் போன்ற நாடுகளில் ஆங்கில மொழி அரச கரும மொழிகளில் ஒன்றாகவே உள்ளது. அரசாங்கத்தின் மூலம் நாட்டில் ஆங்கில மொழியை வளர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள ப்படுகின்றன. ஆனால் அவை நாட்டின் எல்லாப் பகுதியினரையும் சென்றடைகின்றதா என்றால், பதில் கேள்விக் குறியே! நகரங்களைப் பொறுத்தவரை, அனைத்து வித வளங்களும் உட்ச பட்ச அளவில் கி