ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம்.
கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான்.
மதுசூதனன் அத்தகைய ஒருவன்.
திமிரன்!
எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி...
எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால் யார் தான் வாசிப்பான், சம காலம் அவ்வளவு ஆரோக்கியமானதா இல்லை, இளசுகளுக்கு இப்ப கிளு கிளுப்புத்தான் கேக்குது" என முணு முணுத்த படி கீபோர்ட்டில் அழித்தல் பொத்தானை நோக்கி கையைக் கொண்டு சென்றார் கமலக்கண்ணன்.
மதுசூதனன் கணினியில் திமிருடன் சிரித்துக்கொண்டிருந்தான்..!
Comments
Post a Comment