Skip to main content

மைக்ரோ கவிதைகள் - 03







காதலில் தோற்றவர்கள்
சாலைகளில்
தலைகுனிந்து செல்வதற்கும்,
உலகத்தின்
கடைசி மனிதனாக
தனித்து நிற்பதற்கும்,
நூற்றாண்டு சோகத்தை
புன்னகைத்து மறைப்பதற்கும்
காரணம் காதல் என்பார்கள்..........
உண்மை என்னவென்றால்,
"கசக்கும் வரம் வேண்டுமா?
இனிக்கும் சாபம் வேண்டுமா?"...
என்று எப்போதுமே கேட்கும் காதல்.
விருப்பப்பட்டு
சாபத்தை தேர்தல் .....
காதலின் குற்றமல்ல!







*****




நமக்காகக் கட்டிய கோட்டை
இடிந்து விழுந்த போது
அதிலிருந்து
எந்தப் பீனிக்ஸ் பறவையும்
மீண்டும் பறக்கவில்லை!
மணற்கோட்டைகளில்
சிறகுகள் முளைக்காது
என்பது
அது இடிந்து விழும்வரை
யாருக்கும் புரிவதில்லை!!







*****




பல பெண்கள் பார்க்கச் செய்கிறார்கள் ....
சில பெண்கள் ரசிக்கச் சொல்கிறார்கள் ....
நீ மட்டும் ஏன் என்னை
அழகாகத் தவிர்க்கிறாய்?
என்று கவித்துவமாக 
ஆரம்பிக்கும் 
ஒருதலைக் காதலர்கள்,
தங்களை பகுதிநேரக் கவிஞர்கள்
என்றே சொல்லிக்கொள்கிறார்கள்.
அவர்களின் காதல் 
எய்தப்படுவதில்லை என்பதையும் 
நேர்மையுடன் 
ஏற்றுக்கொள்கிறார்கள்.






*****




மின்மானி வாசிப்பாளர் வேலையில் 
தினமும்
சந்தோஷமும் அன்பும் 

செழித்துக் கொளிக்கும் 
ஏழை வீடுகளையும் பார்க்க முடிகின்றது.
சந்தோஷத்திலும் அன்பிலும் 

ஏழ்மையான 
பணக்கார வீடுகளையும் பார்க்க முடிகின்றது....
முன்னையவருக்கு மட்டுமே 

வாழ்க்கைக்கான 
சூத்திரம் தெரியும் போல...






*****




அவமானப் படுத்தியவரிடமும்
ஏன் அன்பாகப் பேசவேண்டும்
என்பது
நண்பனின் முறைப்பாடு.
எதிரியையும் வீழ்த்தவேண்டும் ...
அம்பால் அல்ல
அன்பால்!
அதுவே நல்ல கோட்பாடு.






*****




எல்லோருக்கும் உள்ளேயும் 
ஒரு சாத்தான் ஒளிந்திருக்கிறது.
அதை அடக்கி ஆள்பவனை 

நல்லவன் என்கிறோம், 
அவ்வப்போது வெளியே விடுபவனை 
சந்தர்ப்பவாதி என்கிறோம், 
சாத்தானாக மாறியவனை 
கெட்டவன் என்கிறோம் .....
நிச்சயமாக
நம் எல்லோருக்குள்ளேயும் 
ஒரு சாத்தான் 
ஒளிந்திருக்கவே செய்கிறது !




.
.
.

Comments

Popular posts from this blog

வெட்கத்துண்டை வீசியவள்!

எப்போது பார்த்தாலும்,  படித்தாலும் மனசை கொள்ளை கொள்ளும் தபூ சங்கரின்  காதல் கவிதைகள் நீ! வெனிஸ்வேலா நாட்டுக்காரியை உலக அழகியாகத் தெரிந்தார்கள் - உன்னைப் பார்க்காத முட்டாள்கள்! உன் விரலைப் பிரிந்த  நகத்துண்டு, உன்னை விட்டு உதிர்ந்த  தலை முடி, உன்னை விட்டுத் தவறிய  கைக்குட்டை என எதுவுமே என்னிடம் இல்லை! உன்னை  வேண்டாமென்று வெறுத்தவை  எனக்கெதற்கு? உனக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடுவேனோ  என்ற பயத்தில், நான் ஆசையாக எழுதிக்காட்டும் கவிதைகளில் - நீ ஆர்வம் காட்டமாட்டாய். உடனே  எனக்குள் நினைத்துக் கொள்வேன் - சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று பொறாமைப் படுகிறதே என்று! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரன் நான். சமயங்களில் மாறிவிடுகிறேன்... வர்ணக்குடுவை சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சியாய், உன் உதட்டுச் செம்பில் நிறைந்து வழியும்  புன்னகைப் பாலாய், உன் கண்களின் படபடப்புக்குள் சிக்கிக் கொண்ட  வெட்கத் துண்டாய், மஞ்சள் பூக்களாய், மலை நாட்டுச்  சுடாத வெய்யிலாய், நதிகளை நனைக்கும் சில்லென்ற மழைய...

திமிரன்

  ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம். கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான்.  மதுசூதனன் அத்தகைய ஒருவன்.  திமிரன்!  எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி... எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால...

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...