Skip to main content

ஹைக்கூவும் விளக்கமும்




நான் எழுதிய சில ஹைக்கூக்களிற்கான விளக்கங்களை என்னுடைய கோணத்திலிருந்து தர முயற்சிக்கின்றேன். எங்கே வேண்டுமானாலும் தோன்றலாம் ஹைக்கூ. முற்றத்தில், சாலையில், பூங்காவில்,கடற்கரையில், சினிமாவில், காதலியின் மடியில் ... இப்படி எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம். ஒரு ஹைக்கூவிற்கு இதுதான் சரியான விளக்கம் என்று எதுவும் அமைந்து விடாது. வாசிக்கும் நபர், அவருடைய மனநிலை, அவருடைய வாழ்க்கைச் சூழ்நிலை என்பவற்றைப் பொறுத்து ஒரு ஹைக்கூவினுடைய விளக்கமும் மாறுபடக் கூடியதாக அமையும். நான் தரும் விளக்கத்தில் இன்னொருவருக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம் அல்லது திருப்திதராமல் விடலாம்; திருப்தி தராது விட்டால் நல்லது. ஹைக்கூவின் தனித் தன்மையே அதுதானே!


1.
கிணற்றைப்போல்
தொட்டிக்குள்ளும்
நிலவு.

விளக்கம் :
அது பௌர்ணமி நிலவு தோன்றும் இன்னுமொரு பிரகாச இரவு. கிணற்றருகில் நின்றுகொண்டு வானம் பார்க்கிறேன். அடடா! என்ன அழகு. அந்த அழகியை தன் அருகினில் வைத்துக் கொள்ள, முப்பது நாட்களாய் வானம் தவமிருப்பது, நிச்சயம் தப்பில்லை. இயல்பாக கிணற்றுக்குள் பார்க்கிறேன், அங்கேயும் நிலவு இன்னும் அழகாய். அருகிலிருக்கும் தொட்டிக்குள்ளும் பார்க்கிறேன், அட! அங்கேயும் நிலவு.  தொட்டியின் நீரைத் திறந்து விட, வாய்க்கால் வழியாக நழுவிச் சென்ற நிலவை சட்டென உறிஞ்சிக் கொண்டது வாழைமரம். முழு நிலவிற்காக முப்பது நாட்கள் தவமிருப்பது வானம் மட்டுமல்ல!



2.
முத்தமிட்டாள் காதலி.
எழும்பவேயில்லை
பிணம்.

விளக்கம் :
அது ஒரு கப்பல் விபத்து. அழிவே கிடையாது என்று இறுமாப்புடன் கூறப்பட்ட கப்பல், பனிப் பாறையுடன் மோதுண்டு, இரண்டு துண்டாய் உடைந்தே போனது. உறைய வைக்கும் குளிரில், கடலுக்குள் வீசப்பட்டார்கள் அந்தக் காதலர்கள். காதலன் அக் கப்பலின் மேற் தள வேலைக்காரன், காதலி அங்கே சமையல் செய்பவள். நடுங்கிக் கொண்டிருக்கும் காதலியை, மிதந்து வந்த பலகையில் ஏற்றி அவளைக் காப்பாற்றி விட்டு, அந்தக் குளிரை தாங்க முடியாது உறைந்து சாகிறான் காதலன். கண் விழிக்கும் காதலி, காதனை அன்புடன் முத்தமிடுகிறாள். ஆனால், அவன் எழும்பவேயில்லை! அவர்களது காதல் அற்புதமானது. அவர்களது பெயர் எதிலும் குறிப்பிடப் படவுமில்லை, யாருக்கும் தெரியவுமில்லை. ஆனால் அந்தக் கப்பலின் பெயர் ’டைட்டானிக்’ காக இருக்க வாய்ப்புள்ளது.



3.
விபச்சாரி விரும்பவில்லை.
பல நிறங்களில்
ரோஜாச்செடி.

விளக்கம் :
அவள் ஒரு விபச்சாரி, இரவுத் தொழிலாளி. பகலில் வாழ்வதற்காக இரவில் தன் ஆடை அவிழ்ப்பவள். இரவுகளில் அவள் கசக்கப்படுகிறாள், கடிக்கப் படுகிறாள். சாராய நாற்றம் கொண்ட பற்களால் அவள் உதடுகள் தின்னப் படுகின்றன. அவள் அவற்றை விரும்புவதில்லை.  அவளிடம் வரும் எல்லோரும் அவளுக்கு ராஜாதான். ஆனால் எந்த இரவு ராஜாவாலும் அவள் மனுசியாக மதிக்கப்பட்டதில்லை. அவள் மன்மத பீடத்தில் கவனம் கொள்ளும் ராஜாக்களுக்கு அவள் மனதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. பகலில் மட்டுமே அவள் தன் இக்ஷ்டம் போல வாழ்கிறாள். அவளுக்கு ரோஜா வளர்க்கப் பிடிக்கும். அவை அவளை தொந்தரவு செய்வதில்லை.ஒரு நிறத்தில் தான் அத்தனையும் பூக்கின்றன. பல நிறங்களில் உள்ள ரோஜாவை அவள் ஏனோ விரும்பவில்லை!



4.
சுதந்திரதின விழாவில்
வழங்கப்பட்டது
கூண்டிலடைத்த வெண்புறா.

விளக்கம் :
அவ்வருட சுதந்திரதின விழாவை, நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகியை, விழா நாயகனாக முன்நிறுத்தி நடாத்திக் கொண்டிருந்தது ஒரு தனியார் நிறுவனம். தியாகியின் சேவை போற்றப்பட்டது, புகழப்பட்டது. விழா முடிவில், வந்திருந்த அனைவருக்கும் பரிசாக கூண்டிலடைத்த வெண்புறா அத்தியாகியின் கையால் பெருமையுடன் வழங்கப்பட்டது. புறா சலனப்படவில்லை. பழகிவிட்டது!  



5.
கண்ணாடியில்
அழகி விம்பம்.
எதிர்காலப் பிணம்.

விளக்கம் : 
அழகு என்பதே உடற்பொலிவுதான் என்று ஆகிவிட்ட காலமிது. உடல் அழகுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை யாரும் அக ஒழுக்கத்திற்கு கொடுப்பதில்லை. அந்தரங்க உறுப்புகளின் அளவிற்கும், அமைப்பிற்கும் இருக்கும் சலுகையில், மனதின் ஆழம் அடிபட்டுவிடுகிறது, அங்கீகரிக்கப் படுவதில்லை. கறுப்பென்றால் முகத்தை சுழித்து அருவருக்கும் பெண்களுக்கு (தங்களை அழகிகளாக நினைத்துக் கொள்ளும்) இந்த நாட்டில் பஞ்சமும் இல்லை. அழகு என்பது நிலையானதல்ல, அது ஆபத்தானதும் கூட என்று அவர்கள் உணர்வதற்குள்..........sorry, it's too late. அழகிகளாக இருப்பவர்கள் மூப்படைந்து, தசைகள் சுருங்கி, இறுதியில் இறந்தும் போகிறார்கள். ஆமாம், எங்கே போனது அவர்கள் அழகு?


* * * * *


Comments

Popular posts from this blog

வெட்கத்துண்டை வீசியவள்!

எப்போது பார்த்தாலும்,  படித்தாலும் மனசை கொள்ளை கொள்ளும் தபூ சங்கரின்  காதல் கவிதைகள் நீ! வெனிஸ்வேலா நாட்டுக்காரியை உலக அழகியாகத் தெரிந்தார்கள் - உன்னைப் பார்க்காத முட்டாள்கள்! உன் விரலைப் பிரிந்த  நகத்துண்டு, உன்னை விட்டு உதிர்ந்த  தலை முடி, உன்னை விட்டுத் தவறிய  கைக்குட்டை என எதுவுமே என்னிடம் இல்லை! உன்னை  வேண்டாமென்று வெறுத்தவை  எனக்கெதற்கு? உனக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடுவேனோ  என்ற பயத்தில், நான் ஆசையாக எழுதிக்காட்டும் கவிதைகளில் - நீ ஆர்வம் காட்டமாட்டாய். உடனே  எனக்குள் நினைத்துக் கொள்வேன் - சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று பொறாமைப் படுகிறதே என்று! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரன் நான். சமயங்களில் மாறிவிடுகிறேன்... வர்ணக்குடுவை சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சியாய், உன் உதட்டுச் செம்பில் நிறைந்து வழியும்  புன்னகைப் பாலாய், உன் கண்களின் படபடப்புக்குள் சிக்கிக் கொண்ட  வெட்கத் துண்டாய், மஞ்சள் பூக்களாய், மலை நாட்டுச்  சுடாத வெய்யிலாய், நதிகளை நனைக்கும் சில்லென்ற மழைய...

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

திமிரன்

  ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம். கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான்.  மதுசூதனன் அத்தகைய ஒருவன்.  திமிரன்!  எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி... எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால...