Skip to main content

ஒரு தபுதாரனின் தவிப்பு



என்ன இந்த வாழ்க்கை 
ஏன் இப்படிக்கொல்கிறதோ...
காதலித்த மனைவியை 
காலனிடம் இழந்தவர்களுக்கு 
வெற்றுச் சுவரை விட
வேறு மார்க்கமேயில்லையா?


வேலை விட்டால் வீடு
வீடு விட்டால் வேலை என்று
சுருங்கிவிட்ட வாழ்க்கை.
நீ அதிகம் விரும்பிய
மழையையோ, மலர்களையோ
கடற்கரையையோ, காதல்பாடல்களையோ 
அனுமதிக்காத வாழ்க்கை.
வேலை நேரம் கழிந்து
எஞ்சிய வாழ்க்கையை
வீடு முழுக்க விரவியிருக்கும்
உன் அடையாளங்களும்
அவை கொண்ட 
நினைவுகளும் தின்கின்றன!
சனி, ஞாயிறு, விடுமுறை தினமோ
இன்னும் மோசம்
இன்னும் மோசம்!


காலையில் தரையிலிருந்து
என்னை எழுப்பிவிட்டு,
குளிக்கும் போதும், 
குடிக்கும் போதும்,
சமைக்கும் போதும், 
சாப்பிடும் போதும்,
துவைக்கும் போதும், 
உலர்த்தும் போதும், 
படிக்கும் போதும், 
சுவரை வெறித்துப்பார்க்கும் போதும்
கூடவே இருந்துவிட்டு...
பிந்திய இரவில் தவறாமல்
கண்ணீருடன் தூங்க வைக்கிறது தனிமை.


நீ அடம்பிடித்து வாங்கிய கட்டில், 
ஆசையாய் மீட்டும் வயலின்,
நமக்குள் பரிமாறிக்கொண்ட பரிசுகள்,
மௌனத்தைப் பேசும் 
உன் சோடிக்கொலுசுகள்,
காதல் சொட்டச் சொட்ட
அனுபவித்து வாழ்ந்த
நம் அந்தரங்க அறையையும்
காலையில் எழுந்ததும்
திறந்துபார்ப்பேன்...
அந்த அறை முழுதும் 
நிறைந்திருக்கும் உன் வாசமும்,
உன் நினைவுகளில் கலந்திருக்கும்
இளஞ்சூடுமே
அன்று முழுவதும் 
என்னை உயிர் வாழச்செய்கிறன.


இப்போதெல்லாம்...
இன்னும் நீளாதா என ஏங்க வைத்து
விரைந்து மறைந்த மாலை வேளைகள்
நகரவே மறுக்கின்றன!
நீ அருகில் இருக்கையில்
இனிமையை அள்ளித்தெளித்த
பௌர்ணமி இரவுகள்... 
இரக்கமென்பதையே மறந்து விட்டன!


ஒரு தாயைப்போல பாசமாக 
தலை வருடி
என்னை மீண்டும் குழந்தையாக்குவாயே
அந்த கை விரல்கள் எங்கே?
நான் ஆசையாய் சாய்ந்து 
அங்கலாய்க்கும் தோள்கள் எங்கே?
என்னிடம் பட படக்கும் 
அந்தக் கண்கள் எங்கே?
என்னைச் சீண்டிப் பர்க்கும்
சிரிப்புகள் எங்கே?
அதோடு சேர்ந்து கொள்ளும்
வளையல்கள் எங்கே?
என்னைக் கடிந்துகொள்ளும்
உன் காதல் எங்கே?
என்னிடம் செல்லம் கொஞ்சும்
உன் காமம் எங்கே?
நெஞ்சில் புதைந்து ஆயிரம் கதைகள் பேசி
கொஞ்சிக் குலாவும் அந்த அழகு முகம் எங்கே?
ஆயுள் வரை என்னோடு
இருப்பதாக வாக்குத்தந்த
உன் வார்த்தைகள் தான் எங்கே?


இவற்றை எல்லாம் மறந்தா
உன்னை தீயில் இடச்சம்மதித்தேன்?
ஏன் சம்மதித்தேன்?
நீ பாதியிலேயே விட்டுச் சென்ற கோபத்திலா
அல்லது 
நீ மீண்டும் வருவாய் என்கிற நம்பிக்கையிலா?
பேசாமல் அந்தத் தீயிலேயே
நானும் பாய்ந்திருக்கலாம்,
என்னையும் மாய்த்திருக்கலாம்!
இப்போது
கோபமும் தோற்று
நம்பிக்கையும் தோற்று
நடைப்பிணமாய்ப் போயிற்றேன்!


என்ன இந்த வாழ்க்கை 
ஏன் இப்படிக்கொல்கிறதோ...
காதலித்த மனைவியை 
காலனிடம் இழந்தவர்களுக்கு 
வெற்றுச் சுவரை விட
வேறு மார்க்கமேயில்லை!

.
.








Comments

Popular posts from this blog

வெட்கத்துண்டை வீசியவள்!

எப்போது பார்த்தாலும்,  படித்தாலும் மனசை கொள்ளை கொள்ளும் தபூ சங்கரின்  காதல் கவிதைகள் நீ! வெனிஸ்வேலா நாட்டுக்காரியை உலக அழகியாகத் தெரிந்தார்கள் - உன்னைப் பார்க்காத முட்டாள்கள்! உன் விரலைப் பிரிந்த  நகத்துண்டு, உன்னை விட்டு உதிர்ந்த  தலை முடி, உன்னை விட்டுத் தவறிய  கைக்குட்டை என எதுவுமே என்னிடம் இல்லை! உன்னை  வேண்டாமென்று வெறுத்தவை  எனக்கெதற்கு? உனக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடுவேனோ  என்ற பயத்தில், நான் ஆசையாக எழுதிக்காட்டும் கவிதைகளில் - நீ ஆர்வம் காட்டமாட்டாய். உடனே  எனக்குள் நினைத்துக் கொள்வேன் - சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று பொறாமைப் படுகிறதே என்று! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரன் நான். சமயங்களில் மாறிவிடுகிறேன்... வர்ணக்குடுவை சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சியாய், உன் உதட்டுச் செம்பில் நிறைந்து வழியும்  புன்னகைப் பாலாய், உன் கண்களின் படபடப்புக்குள் சிக்கிக் கொண்ட  வெட்கத் துண்டாய், மஞ்சள் பூக்களாய், மலை நாட்டுச்  சுடாத வெய்யிலாய், நதிகளை நனைக்கும் சில்லென்ற மழைய...

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

திமிரன்

  ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம். கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான்.  மதுசூதனன் அத்தகைய ஒருவன்.  திமிரன்!  எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி... எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால...