Skip to main content

ஒரு தபுதாரனின் தவிப்பு



என்ன இந்த வாழ்க்கை 
ஏன் இப்படிக்கொல்கிறதோ...
காதலித்த மனைவியை 
காலனிடம் இழந்தவர்களுக்கு 
வெற்றுச் சுவரை விட
வேறு மார்க்கமேயில்லையா?


வேலை விட்டால் வீடு
வீடு விட்டால் வேலை என்று
சுருங்கிவிட்ட வாழ்க்கை.
நீ அதிகம் விரும்பிய
மழையையோ, மலர்களையோ
கடற்கரையையோ, காதல்பாடல்களையோ 
அனுமதிக்காத வாழ்க்கை.
வேலை நேரம் கழிந்து
எஞ்சிய வாழ்க்கையை
வீடு முழுக்க விரவியிருக்கும்
உன் அடையாளங்களும்
அவை கொண்ட 
நினைவுகளும் தின்கின்றன!
சனி, ஞாயிறு, விடுமுறை தினமோ
இன்னும் மோசம்
இன்னும் மோசம்!


காலையில் தரையிலிருந்து
என்னை எழுப்பிவிட்டு,
குளிக்கும் போதும், 
குடிக்கும் போதும்,
சமைக்கும் போதும், 
சாப்பிடும் போதும்,
துவைக்கும் போதும், 
உலர்த்தும் போதும், 
படிக்கும் போதும், 
சுவரை வெறித்துப்பார்க்கும் போதும்
கூடவே இருந்துவிட்டு...
பிந்திய இரவில் தவறாமல்
கண்ணீருடன் தூங்க வைக்கிறது தனிமை.


நீ அடம்பிடித்து வாங்கிய கட்டில், 
ஆசையாய் மீட்டும் வயலின்,
நமக்குள் பரிமாறிக்கொண்ட பரிசுகள்,
மௌனத்தைப் பேசும் 
உன் சோடிக்கொலுசுகள்,
காதல் சொட்டச் சொட்ட
அனுபவித்து வாழ்ந்த
நம் அந்தரங்க அறையையும்
காலையில் எழுந்ததும்
திறந்துபார்ப்பேன்...
அந்த அறை முழுதும் 
நிறைந்திருக்கும் உன் வாசமும்,
உன் நினைவுகளில் கலந்திருக்கும்
இளஞ்சூடுமே
அன்று முழுவதும் 
என்னை உயிர் வாழச்செய்கிறன.


இப்போதெல்லாம்...
இன்னும் நீளாதா என ஏங்க வைத்து
விரைந்து மறைந்த மாலை வேளைகள்
நகரவே மறுக்கின்றன!
நீ அருகில் இருக்கையில்
இனிமையை அள்ளித்தெளித்த
பௌர்ணமி இரவுகள்... 
இரக்கமென்பதையே மறந்து விட்டன!


ஒரு தாயைப்போல பாசமாக 
தலை வருடி
என்னை மீண்டும் குழந்தையாக்குவாயே
அந்த கை விரல்கள் எங்கே?
நான் ஆசையாய் சாய்ந்து 
அங்கலாய்க்கும் தோள்கள் எங்கே?
என்னிடம் பட படக்கும் 
அந்தக் கண்கள் எங்கே?
என்னைச் சீண்டிப் பர்க்கும்
சிரிப்புகள் எங்கே?
அதோடு சேர்ந்து கொள்ளும்
வளையல்கள் எங்கே?
என்னைக் கடிந்துகொள்ளும்
உன் காதல் எங்கே?
என்னிடம் செல்லம் கொஞ்சும்
உன் காமம் எங்கே?
நெஞ்சில் புதைந்து ஆயிரம் கதைகள் பேசி
கொஞ்சிக் குலாவும் அந்த அழகு முகம் எங்கே?
ஆயுள் வரை என்னோடு
இருப்பதாக வாக்குத்தந்த
உன் வார்த்தைகள் தான் எங்கே?


இவற்றை எல்லாம் மறந்தா
உன்னை தீயில் இடச்சம்மதித்தேன்?
ஏன் சம்மதித்தேன்?
நீ பாதியிலேயே விட்டுச் சென்ற கோபத்திலா
அல்லது 
நீ மீண்டும் வருவாய் என்கிற நம்பிக்கையிலா?
பேசாமல் அந்தத் தீயிலேயே
நானும் பாய்ந்திருக்கலாம்,
என்னையும் மாய்த்திருக்கலாம்!
இப்போது
கோபமும் தோற்று
நம்பிக்கையும் தோற்று
நடைப்பிணமாய்ப் போயிற்றேன்!


என்ன இந்த வாழ்க்கை 
ஏன் இப்படிக்கொல்கிறதோ...
காதலித்த மனைவியை 
காலனிடம் இழந்தவர்களுக்கு 
வெற்றுச் சுவரை விட
வேறு மார்க்கமேயில்லை!

.
.








Comments

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

வரமாய் வந்த தேவதை

ஆண் குரல் :  வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்துப்  பொன்வண்டு நீ இதயத்தை அரிக்கும்  சில் வண்டு! கனவுகள் வரைந்த  ஓவியம் நீ கவிஞர்கள் படைத்த  காவியம்! மொட்டுக்கள் விழித்து மலராகும் உன் கூந்தலின் மென்மையை களவாடும்! ** வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டு நீ இதயத்தில் இனிக்கும்  கற்கண்டு! ** உன் உதட்டினில் பிறப்பது சிறு கவிதை அது உடனே மறைவது பெருங்கவலை! இரவுகள் வருவது  எதற்காக? உன்னால் பௌர்ணமி தோற்கணும் அதற்காக! **   வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டே உன் இதயத்தில் எனக்கொரு இடமுண்டா! ** நதிக்குள் குதித்தது நீர்வீழ்ச்சி அதன் காதல் தோல்விக்கு நான் சாட்சி! உன்னருகால் உலகை அழகாக்க என் ஆயுள் முழுக்க நீ வேண்டும்! **   வரமாய் வந்த  தேவதை நீ கு...