தலையணையின் கீழ்
பதுக்கி வைத்த
உன் நினைவுகள்
பஞ்சினூடாகக் கசிந்து
என்னைத் தூங்க விடுவதேயில்லை.
உன் பெயரைப் போலவே
நீயும்
அற்புதமானவள், ஆச்சரியமானவள்.
எனக்கு அப்படியல்ல!
நீ எப்படியிருப்பாயோ
என நினைத்தால் அது அபத்தம்.
நீ நலமாகவே இருப்பாய்.
நான் எப்படியிருப்பேன் என்று
எப்போதாவது நினைப்பாயா ?
காதல் வலியில்
என்னை நானே
காயப்படுத்தும் போதெல்லாம்
ஒன்று கூட
உன்னைப் பிரிந்த வலிக்கு
ஈடாகவேயில்லை.
மேகங்களை
ஓட்டிச் செல்வது போல
என்னையும் உன் அருகில்
கொண்டு சேர்க்காதா
இந்தக் காற்று - இனியாவது?
என்காதலைத் தெரிந்த போது
சிரித்தாயாம்.
கேலிக்குள்ளானது
காதல்.
இன்னொரு முறை
நட்பாய் சிரித்து
என்னை ஏற்றுக்கொண்டாய்....
காதலையல்ல!
பிரியும் வேளையில்
வாழ்த்துக்கள்
பரிமாறிக் கொண்டோம்.
புன்னகையுடன்
பிரிந்து சென்றாய்.
நான்
அன்று முதல்
புன்னகைக்க வில்லை.
.
.
.
Comments
Post a Comment