மானே மரகதமே
நான் பெற்ற மரிக்கொழுந்தே
உன்னைச் சுமந்த படி
ஒவ்வொன்றாய்
நான் சொல்வேன்...
ஊருக்குள்ள உங்கப்பா
பெரியவீடு கட்டினாரு.
ஊரே வாழ்த்தியது
ஒசத்தியாத்தான் பேசியது.
நம் வீட்டு முத்தத்தில
நட்சத்திரப் பூப்பூக்கும்
நிலவு தினம் வந்து
நல் வாழ்த்துப் பாடிச் செல்லும்.
சந்தோசமாய் நாமிருந்தோம்.
சகலதும் பெற்றிருந்தோம்.
யாற்ற கண் பட்டிச்சுதோ
நானறியேன் என் கண்ணே.
ஆடி மாசம் ஓரிரவு
அப்பாவுக்கு நெஞ்சுவலி
ரொம்பத் துடிச்சாரு.
சிரிச்ச படியே போய்ட்டாரு.
உங்கப்பா போன பின்னே
அப்புறந்தான் நீ பொறந்தே.
செல்வக் களஞ்சியமே
சீர் நிறைந்த பொக்கிசமே.
கடன் வாங்கிக் கட்டின வீட்ட
கடன்காரன் எடுத்துக் கொள்ள
நல்லா வாழ்ந்தவங்கன்னு
ரெண்டு வரிதான் மிஞ்சியது.
ஐயோ பாவமுன்னு
யார் யாரோ வந்தாங்க.
ஆம்பிளைங்க பேசினத
என்னான்னு நான் சொல்வேன்?
நெல்லுக் கிறச்ச தண்ணி
வீணாகப் போவதில்லை.
அம்மா வடிச்ச கண்ணீருக்கு
அர்த்தம் தர நீயிருக்க.
சபிக்கப்பட்ட பூமியில
பாவப் பட்ட ஜீவன் நாங்க.
எனக்குச் சொந்தம் எண்டு
உன்னை விட்டா யாரிருக்கா?
நீ வளந்து இம்மண்ண
ஆளவேணும் என் ராசா.
பால் குடிச்ச பைங்கிளியே
இப்போ கொஞ்சம் நீ தூங்கு!
.
.
.
தாலாட்டு சும்மா கடனுக்கு பாடவில்லை. அருமை. வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி
ReplyDelete