Skip to main content

நீ என்கிற நான்!


காதலிக்கின்றேன்.
பிரிந்து சென்ற உன்னை
இன்னும் காதலிக்கின்றேன்.
வில்லன் யார்?
சமுதாயம் என்று பெயர்.

நீ நீயாகவும்,
நான் நானாகவும்
இருந்து தொலைத்திருக்கலாம்...
ஏன்
நீ நானாகவும்,
நான் நீயாகவும் ஆனோம்?
நம்மை
வீழ்த்திப் பார்த்ததில்
என்ன சுகம் கண்டதோ
இந்தக் காதல்?

காதல்...
ஒன்று கண்ணில் தோன்றி
கருவறை அடையும்.
மற்றயது கண்ணில் தோன்றி
கல்லறையில் முடியும்.
முன்னையது
போற்றப்பட்ட காதல்,
வரம் வாங்கி வந்த காதலர்கள்.
பின்னையது
தூற்றப்பட்ட காதல்,
சபிக்கப் பட்ட காதலர்கள்.

நாம் கூட
வரம் வாங்கியதால்
சபிக்கப் பட்டவர்கள்...

என் உயிரைத் தொட்ட
முதல் பெண் நீ.
உன் உணர்வைத் தொட்ட
முதல் ஆண் நான்.

என் தவறுகளைத்
தெரிய முன்பே
என்னைக் காதலித்தாய்...
தெரிந்த பின்
இன்னும் காதலித்தாய்.

ஒருவனுக்கு ஒருத்தி
அந்த ஒருத்திக்குள்
ஒரு தீ!
அதுவே காதல் என்பாய்.

உன்னை எனக்காய்
அர்ப்பணித்தாய்.
அதற்காகவே நானும்
ஆர்ப்பரித்தேன்...

நாம்
சேர்ந்து வாழ்வது பற்றி
என்னை விட அதிகம்
கனவுகள் சுமந்தவள் நீதான்.

நீ நாளை பற்றி
அதிகம் பேசினாய்.
நான் உன்னைப் பற்றி
அதிகம் யோசித்தேன்...

நாம் இருவரும்
சேர்ந்து வாழ வேண்டும்
என்பது மட்டும் தான் காதலா?
உன் உறவுகளுக்காய் நீயும்,
என் உறவுகளுக்காய் நானும்
பிரிந்து நின்று
சோகம் பகிர்கிறோமே
இதுவும் காதல் தான்...

உடலைச் சார்ந்த காதலாய்
இருந்திருந்தால்
ஓடிப் போயிருக்கலாம்...
இது
உயிரைச் சார்ந்தது அல்லவா?

என் இதயத்தை
எடுத்துக் கொண்டால்
எனக்கு வலிக்குமென்று,
உன் இதயத்தையும்
என் இதயத்தையும்
என்னிடமே விட்டுச் சென்றவள்
நீ!
இன்னும் நீ
என் இதயத்தில் தான்...

என்னைப் பிரிவதாய்
எவ்வளவு அழுதாய்.
நான் அழவில்லை!
கண்ணுக்குள் இருக்கும் நீ
கரைந்து விட மாட்டாயா?

நான் பொய் சொல்வதை
விரும்பாதவள் நீ.
எங்கேயும் பார்த்துக் கொண்டால்
நலத்தை மட்டும் விசாரிக்காதே!
.
.
.

Comments

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

தாழ்வு மனப்பான்மை!

> >> > உளவியல் கணிப்புப்படி தாழ்வு மனப்பான்மையின்  தாய் - உடலமைப்பு! தந்தையோ - நிறக்குறைவு! தாழ்வு மனப்பான்மையை  விட்டொழி, வெற்றி பெறுவாய் என்று போதிப்பது  சுய முன்னேற்றப் புத்தகங்களின்  விற்பனைத் தந்திரம்! கல்லா கட்டியதும் தங்கள் கடையை மூடி விடுவார்கள்! பாதிக்கப்பட்டவனோ  பாதியிலே விடப்படுவான்! உண்மையில் உடல் அமைப்பும் நிறக் குறைவும் ஒருபோதும் நோயாகாது! தோற்றத்தைப் பார்த்து  எடைபோடுபவர்களை வேண்டுமானால் மன நோயாளிகளாக வைத்துக் கொள்ளலாம். அவர்கள் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்லலாம். என்னைப் பொறுத்தவரை, தாழ்வு மனப்பான்மை என்பது கேடயம்! பந்தாக் காரர்களும், பணக்காரர்களும்  பவிசுக் காரர்களும், பதவிக்காரர்களும்  குணமற்றவர்களும்,  நல்ல மனமற்றவர்களும்  வடிகட்டப்பட்டு, நல்லவர்கள் மட்டுமே நட்பாய் கிடைக்கும்! நல்ல நட்பு என்பது  மிகப் பெரும் வரம்! தலைக்கனத்தோடு இருப்பதைவிட, தாழ்வு மனப்பான்மையுடன்  இருப்பதொன்றும் குற்றமெல்ல! காரணம் -...

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...